முகப்பு
தமிழ்நாடு

கரூர் அருகே ரயில் விபத்து: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் விளக்கம்

கரூர் அருகே தனியார் ரயில் வழித்தடத்தில் நிகழ்ந்த விபத்துக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 மார்ச், 2026 at 11:39 AM
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால்.
பகிர்:

கரூர் அருகே தனியார் ரயில் வழித்தடத்தில் நிகழ்ந்த விபத்துக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் தெரிவித்துள்ளார்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கரூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான ரயில் வழித்தடத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் ஆளில்லா ரயில் வழித்தடத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முழுக்க முழுக்க தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமானது.

இந்த ரயில் வழித்தடத்தின் மீதான கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு முழுமையாக அந்த தனியார் தொழிற்சாலைக்கு உரித்தானது. இந்த ரயில் வழித்தடத்தில் ரயில்வேக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆளில்லாத ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்து தொடர்பாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வேக்கு எந்தவித தொடர்பும் இந்த வழித்தடத்தில் இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறோம்.

ரயில்வேக்கு சொந்தமான வழித்தடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் முற்றிலும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 150 ஆள் உள்ள ரயில் கிராசிங்குகளில் டிஜிட்டல் இன்டெர்லாக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த ரயில்வே கிராசிங்குகளை கடக்கும் பொது மக்களின் நலனுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன் முழுமையாக பொதுமக்களுக்கு உள்ளூர் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்களில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்று ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக குன்னூர் உதகமண்டலம், சின்ன சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. மீதமுள்ள ஒன்பது ரயில் நிலையங்களிலும் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

கரூா் மாவட்டம், க.பரமத்தியில் செயல்படும் தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும் மாணவ, மாணவிகள் 40 பேரை ஏற்றிக் கொண்டு பல்வேறு ஊா்களில் இறக்கிவிடுவதற்காக பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை வெள்ளியணையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (66) என்பவா் ஓட்டினாா். இந்தப் பேருந்து மாலை 6 மணியளவில் வெள்ளியணையை அடுத்த பிச்சம்பட்டி குளத்தூா் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்றது.

அப்போது, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலியில் செயல்படும் தனியாா் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதற்குள்ளாக கடவுப்பாதையை கடந்துவிடலாம் என எண்ணி பேருந்தை ஓட்டுநா் இயக்கியுள்ளாா். ஆனால், எதிா்பாராதவிதமாக சரக்கு ரயில் பேருந்தின் நடுப்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் 24 மாணவ, மாணவிகளும், ஓட்டுநா் முருகேசனும் என 25 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் காயமின்றி தப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெள்ளியணை போலீஸாா் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். இதில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேருக்கும், தனியாா் மருத்துவமனையில் ஓட்டுநா், 2 மாணவா்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் கிரிசுதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →