அனுமதியுடன் மரங்களை வெட்டுவதால் அழிந்துவரும் வனப்பகுதி
போடி, அக். 20: அனுமதி என்ற பெயரில் மரங்களை வெட்டுவதால் தேனி மாவட்டத்தில் வனப்பகுதி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், வருசநாடு உள்பட மொத்தம் 8 வனச்சரகப் பகுத
போடி, அக். 20: அனுமதி என்ற பெயரில் மரங்களை வெட்டுவதால் தேனி மாவட்டத்தில் வனப்பகுதி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், வருசநாடு உள்பட மொத்தம் 8 வனச்சரகப் பகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 54 ஆயிரத்து 857 ஹெக்டேர் வனநிலம் உள்ளது. இந்த வனப் பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், மயில், காட்டெருமை, காட்டுப் பன்றி உள்பட பல வனவிலங்குகள் வசிக்கின்றன.
வனப் பகுதியை ஒட்டி பட்டா நிலங்கள் உள்ளன. பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை விரிவுபடுத்தி விவசாயம் செய்வதற்காக பல ஏக்கர் வன நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுகின்றனர். பட்டா நிலங்களில் காய்ந்த, விழும் நிலையில் உள்ள மரங்களை மட்டுமே வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மரம் வெட்டுவதற்கு ஆட்சியர் தலைமையிலான தனிக்குழு அனுமதி அளிக்கிறது.
ஆனால், பெயரளவில் அனுமதி பெற்றுவிட்டு பச்சை மரங்களையும், வனத் துறைக்குச் சொந்தமான மரங்களையும் வெட்டிக் கடத்துகின்றனர்.
இதனால் வனப்பகுதி அழியும் நிலையும், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. போடி, தேவாரம் பகுதியில் மரம் வெட்டுபவர்களின் தொந்தரவால் பல நேரங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.
போடி பகுதியில் மரம் வெட்டுபவர்கள் வனப் பகுதியில் தீ வைத்து வருகின்றனர். வீட்டுத் தேவை உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டுமின்றி, மரக்கரி தயாரிக்கவும் மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர்.
நடப்பாண்டு மரம் வெட்டியதாக 8 வனச்சரகப் பகுதியில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வனத் துறை அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுத்தாலும், சிலர் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அனுமதி பெற்று மரம் வெட்டுவதாகக் கூறி ஏராளமான மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர்.
மரம் வெட்ட அனுமதி பெறுபவர்களிடம், எதற்காக மரங்களை வெட்டுகின்றனர்?, வெட்டப்படும் மரத்தின் தன்மை முதலியவற்றை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.
அதிக அளவில் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு மரங்களை வெட்டினால் அதற்கேற்றார் போல் மரக்கன்றுகளை நட வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும்.
மரம் வெட்டுபவர்களிடம் புதிதாக மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிப்பதற்கான செலவுத் தொகையை வசூல் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அதிக அளவில் மரங்களை வெட்டுவது குறையும்.
இதுகுறித்து வனத் துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, மரம் வெட்டுவதற்கு பல நிபந்தனைகளை விதித்துத்தான் அனுமதி வழங்குகிறோம். ஆனாலும், சில நேரங்களில் முறைகேடுகள் நடந்து விடுகின்றன.
முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.