பழனி அருகே உண்டு உறைவிடப் பள்ளி மூடல்: மலைவாழ் மக்கள் குழந்தைகள் கல்வி பாதிப்பு
பழனி, ஆக. 17: பழனி அருகே ஆண்டிபட்டி மண்திட்டு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. பழனியில் இருந்து
பழனி, ஆக. 17: பழனி அருகே ஆண்டிபட்டி மண்திட்டு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது.
பழனியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆண்டிப்பட்டி அருகே மண்திட்டு என்ற மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிராந்து மலை, பிராந்து மடை, மாங்குளி பள்ளம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த 19 மலைவாழ் மக்கள் குடும்பங்களை வனத் துறையினர் சமவெளிப்பகுதிக்கு அழைத்து வந்து அவர்களுக்குப் புதிய குடிசைகள் அமைத்துத் தந்தனர்.
மேலும் அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வனப் பகுதியில் விறகு, தேன், ஈஞ்சி சேகரித்து விற்பனை செய்ய உரிமம் ஆகியனவும் வழங்கப்பட்டன.
19 குடும்பங்களில் மொத்தம் 87 பேர் உள்ளனர். இவர்களில் கல்வி பயிலும் நிலையில் உள்ள குழந்தைகளுக்காக எய்ட் எட் ஆக்சன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சிறிய உண்டு, உறைவிடப் பள்ளியும் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பள்ளி சில வாரங்களாக இயங்கவில்லை.
இதனால் பழங்குடி மலைவாழ் மக்கள் கோதுமை, கேழ்வரகு மற்றும் மலைகளில் பறித்து வந்த கிழங்குகளைக் கொண்டு கூழ் வைத்துச் சாப்பிட்டுள்ளனர். பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளதால் இந்த மக்கள் காட்டுக்குச் செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து மையத்தை நடத்துவோர் நிதியில்லை எனத் தெரிவித்துள்ளனர். ரேஞ்சர் தர்மராஜ் கூறும்போது, இந்தப் பள்ளி சரியாகச் செயல்படாத நிலையில், ஆண்டிபட்டி பஞ்சாயத்து மூலம் இந்த இடத்தில் பால்வாடி மையம் துவக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, இங்கு விரைவில் அங்கன்வாடி மையம் துவக்கப்படும் என்றார்.
எது எப்படியோ விரைவில் இங்கு பள்ளியைத் துவக்கி ஒரு நேரமாவது உணவு வழங்கினால்தான் கல்விக் கண் திறக்கும் என்பது உண்மை.