முகப்பு
மதுரை

பாம்பன் பாலத்தில் கூடுதல் பலத்துடன் ரயில்களை இயக்கும் பணிகள் தீவிரம்

ராமநாதபுரம், ஜூன் 20:    வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கூடுதல் பலத்துடன் சரக்கு ரயில்களை இயக்கும் வகையில் கர்டர்கள் பொருத்தும் பணியும், ரயில் பாலத்தின் நடுவில் ரயில்வே ஊழியர்கள் நடந

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:24 PM
பகிர்:

ராமநாதபுரம், ஜூன் 20:    வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கூடுதல் பலத்துடன் சரக்கு ரயில்களை இயக்கும் வகையில் கர்டர்கள் பொருத்தும் பணியும், ரயில் பாலத்தின் நடுவில் ரயில்வே ஊழியர்கள் நடந்து செல்லும் வகையில் ஸ்டீல் தகடுகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகின்றன.

பாம்பன் கடலில் கப்பல்கள் வந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில், ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 1911-ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த ஆங்கிலேயப் பொறியாளர் ஜெர்ஜர் என்பவரால் இப்பாலம் வடிவமைக்கப்பட்டது. 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் ரயில், பாம்பன் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு தனது பயணத்தை துவக்கியது.

இப்பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப் பாலம், கப்பல்கள் செல்லும்போது மட்டுமே தூக்கப்படும். மற்ற நேரங்களில் ரயில் செல்ல வசதியாக மூடியே இருக்கும். தூக்குப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிங் லிவர் எனப்படும் நெம்புகோலின் உதவியால், பாலத்தை மேலே தூக்கவும், இறக்கவும் முடிகிறது.

Advertisement

கப்பல்கள் இப்பாதையைக் கடக்க முற்படும்போது பாம்பனில் உள்ள துறைமுக

அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் துறைமுக அலுவலகத்திலிருந்து எழுத்து மூலமாக, கப்பல் கடக்க வழி செய்யுமாறு பாம்பன் ரயில்வே அலுவலகத்துக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கின்றனர். அதன் பின்னர் கப்பலை அனுமதித்து பாலத்தை மேலே தூக்கி இறக்குகின்றனர் ரயில்வே ஊழியர்கள்.

இவ்வாறு கப்பல்கள் வரும் போது ரயில் பாலத்தை மேலே தூக்கவும், கீழே இறக்கவும் ஏதுவாக ரயில்வே ஊழியர்கள் எப்போதும் அப்பாலத்தில் உள்ள கேபினில் 3 ஷிப்ட் முறையில் பணிபுரிகிறார்கள். இவர்கள் ரயில் வருவதற்கு முன், பாம்பன் பாலத்தின் நடுவே பணி நிமித்தமாக சென்று வர வேண்டியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இப்பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலில் காற்று அதிகம் வீசும் காலமாகும். அந்த நேரங்களில் பணி நிமித்தமாக ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையில் நடந்து செல்லும்போது, கால் தடுக்கி கீழே விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே அவர்கள் சுலபமாக நடக்க வசதியாக பாதையின் நடுவில் இரும்பு தகடுகள் பொருத்தும் பணியும், பிடித்து நடந்து செல்லும் வகையில் கைப்பிடி அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:

மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இப்பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இப்பாதையில் பயணிகள் ரயில் மட்டுமே சென்று வருகிறது.

இதன் பாதுகாப்பு கருதியும், சரக்கு ரயில்கள் செல்லும் வகையிலும் பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப் பாலத்தின் நாலாபுறமும் கடலில் கிணறு போன்று தோண்டப்பட்டு அதில் எளிதில் துருப்பிடிக்காத உலோகத்தினால் ஆன கர்டர்களை பொருத்த இருக்கிறோம். இதனால் தூக்குப் பாலம் கூடுதல் பலமடைகிறது. இந்தப் பணிகளை ஓரிரு மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

பாலத்தில் பணிகள் நடக்கும் போது அதாவது பகல் நேரத்தில் மட்டும் தற்போது செல்லும் திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு விடும். பிற ரயில்கள் வழக்கம் போல அப்பாதையில் இயக்கப்படும்.

பாலத்தை இயக்கும் பிரிட்ஜ் ஆபரேட்டர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் ரயில் பாதையின் நடுவில் இரும்பு தகடுகள் பொருத்தும் பணியும்,அவர்கள் பிடித்து நடந்து செல்லும் வகையில் கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

உலகிலேயே மிக அதிகமாகத் துருப்பிடிக்கும் இடம் அமெரிக்காவில் உள்ள மியாமி  பகுதியாகவும், இரண்டாவதாக ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பகுதியாகவும் உள்ளது.

எனவே, பாலத்தில் எளிதில் துருப்பிடித்துவிடாத வகையில் ரசாயனக் கலவையுடன் கூடிய வர்ணப் பூச்சும் செய்து வருகிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.