மதுரை, மார்ச் 16: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக "தைராய்டு' பாதிப்பைக் கண்டறியும் முக்கியப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்னை தைராய்டு நோய். கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் குறைபாடு ஏற்பட்டால் இவ்வகை நோய் வரும்.
சுரப்பி குறைவாக சுரந்தாலும், கூடுதலாக சுரந்தாலும் நோய் பாதிப்பு ஏற்படும். நோய் பாதிப்புக்கு சிகிச்சைபெற மதுரை அரசு மருத்துவமனைக்கு சராசரியாக மாதத்துக்கு 3,500 பேர் வருகின்றனர்.
இதில் 65% பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் கர்ப்பிணிகளாகவும் உள்ளனர். மேலும், இந்நோய் பாதிப்பால் 20% பேர் கழுத்தில் கட்டி ஏற்பட்டு, அதை அறுவைச் சிகிச்சை செய்யும் நிலைக்கும் ஆளாகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு, தினமும் குறைந்தது 70 பேர் தைராய்டு பரிசோதனைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ரத்த மாதிரி, ஹீமோகுளோபின், யூரியா, சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், டி3, டி4 மற்றும் டிஎஸ்எச் என்ற முக்கியப் பரிசோதனகளும் தைராய்டு பாதிப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு, தைராய்டு சிகிச்சைக்குத் தேவையான வேதிப்பொருள்கள் மற்றும் சிறப்புமுறையில் தயாரிக்கப்பட்ட கண்ணாடிக் குழாய் (டெஸ்ட் டியூப்) ஆகியவை, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையப் பிரிவிலிருந்தே மாதா மாதம் தருவிக்கப்படுகின்றன.
இந்த கண்ணாடிக் குழாய்கள் கதிர்வீச்சுத் தன்மை உடையதால், அதை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும்.
இந்த நிலையில் மாதத்துக்கு 250 பேருக்கு பயன்படுத்தும் வகையில் 42 பாக்கெட் பரிசோதனைப் பொருள்களே வாங்கப்படுகின்றன. இதனால், பற்றாக்குறை ஏற்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே, தைராய்டு கண்டறியும் முக்கியப் பரிசோதனைகளான டி4, டிஎஸ்எச் ஆகியவை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், இந்தப் பரிசோதனையை வெளி ஆய்வகங்களில் மேற்கொள்ளும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் பரிசோதனை மையங்களில் முக்கிய மூன்று வகைப் பரிசோதனைகளுக்கும் ரூ. 500}க்கும் மேலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், ஏழை நோயாளிகளால் தைராய்டை உறுதிசெய்யும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறைத் தலைவர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது, தைராய்டு நோய் கண்டறியும் முக்கியப் பரிசோதனைகள் "ரேடியோ ஐசோடோப்' முறையில், நவீன சாதனம் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
என்றாலும் ஓரிரு நாளில் மும்பையிலிருந்து வேதியியல் பொருள்கள் மற்றும் கண்ணாடிக் குழாய்கள் வந்துவிடும் என்றார்.
மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் எஸ்.எம். சிவகுமாரிடம் கேட்டபோது, இப்பிரச்னை இப்போதுதான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பரிசோதனைக்கு உரிய வேதிப்பொருள்களை மும்பையிலிருந்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.