முகப்பு
மதுரை

கண்மாயில் தண்ணீர் இல்லாததால் கருவேல மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தும் விவசாயிகள்

சிவகங்கை, ஜன. 23:சிவகங்கை அருகே கண்மாயில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் செய்ய வழியின்றி, வயலில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை ஊராட்சி ஒ

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:14 PM
பகிர்:

சிவகங்கை, ஜன. 23:சிவகங்கை அருகே கண்மாயில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் செய்ய வழியின்றி, வயலில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சக்கந்தி ஊராட்சியில் உள்ளது பாசாங்கரை கிராமம். இங்கு உள்ள பாசாங்கரை கண்மாயை நம்பி இப்பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கண்மாயும், அதன் நீர் வரத்துக் கால்வாயும் தூர்ந்துபோனதால், தண்ணீரைத் தேக்கி வைக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2008-ல் ரூ.3.60 லட்சம் செலவில் பாசாங்கரை கண்மாய் தூர்வாரப்பட்டது. ஆனால் வரத்து கால்வாய் சீரமைக்கப்படாத்தால், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் அதிக அளவில் மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளில், கிராமத்தில் இருந்த வயல்கள் எல்லாம் கருவேலமுள் காடுகளாக மாறிவிட்டன. விவசாயம் தவிர, வேறு வேலை தெரியாத கிராம மக்கள், வேறுவழியின்றி கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

பத்து பேர் சேர்ந்து, ஒரு நாள் முழுக்க வெட்டினால் ஒன்று முதல் ஒன்றரை டன் வரை விறகு கிடைக்கும். இவற்றை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 1,000 முதல் 1,500 வரை கிடைக்கும். இதில் நில உரிமையாளருக்கு பணம் கொடுத்தது போக, ஒருவருக்கு ரூ.100 வரை வருவாய் கிடைக்கும் என்கின்றனர் இக்கிராம மக்கள்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வி.முனியாண்டி கூறியதாவது: விடுமுறை தினங்களில், எனது குடும்பத்தினருடன் சேர்ந்து கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுவேன். வேறு எந்த வேலையும் கிடைக்காததால், எங்கள் கிராம மக்கள் இந்த வேலையைச் செய்து வருகின்றனர் என்றார்.

எங்கள் கிராமத்துக்கு தார்சாலை வசதி இல்லை. மண் சாலைதான் உள்ளது. தெரு விளக்கு இல்லை. திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளை நடத்த இங்கு சமுதாயக்கூடம் இல்லை என்று பட்டியலிட்டார் திருமால் என்ற கிராம வாசி.

   இந்த பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமாக உள்ள ஏரி நீர்வரத்துக் கால்வாய் குறித்து சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, நீர்வரத்துக் கால்வாய் புனரமைப்புக்கு நிர்வாக அனுமதி கிடைத்துவிட்டது. அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →