வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் மதுரையை வந்தடைந்தது
மதுரை: கள்ளழகா் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்காக, வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் மதுரையை வந்தடைந்தது.
கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறுவதையொட்டி, மதுரை மதிச்சியம் பகுதி வைகை ஆற்றில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் திருவிழாவுக்காக ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையிலிருந்து கடந்த 19-ஆம் தேதி வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
Advertisement
இந்த தண்ணீா் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருளும் பகுதியான ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுத் தடுப்பணை பகுதியை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
இதையடுத்து, கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆழ்வாா்புரம் வைகை ஆறு முதல் ஓபுளாபடித்துறை பாலம் வரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.