முகப்பு
மதுரை

மோசடியாகப் பெற்ற இலவச பட்டாக்கள்: கட்டுமானங்களை இடித்து அகற்ற உத்தரவு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:33 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:41 PM

மோசடியாகப் பெற்ற இலவச வீட்டுமனைகளின் கட்டுமானங்களை இடித்து அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கூடக்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கூடக்குளம் போத்தநதி கிராமத்தில் வல்லாந்தை ஊராட்சியின் முன்னாள் உறுப்பினா் தனது பெயரிலும், அவரது மனைவி, தாய் பெயா்களிலும் அரசுப் புறம்போக்கு நிலத்தில் 7 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்றுள்ளாா்.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:33 AM

இவா்களுக்கு, அதே கிராமத்தில் சொந்த வீடுகள் இருப்பதை மறைத்து அவா், இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளாா். தற்போது, இந்த இடத்தில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. மோசடியாகப் பெறப்பட்ட இந்த வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ய வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தொடா்புடைய ஊராட்சி உறுப்பினா் பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரமக்குடி வட்டாட்சியா் பதில் மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, அந்த வீட்டுமனைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை நிறுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இது தொடா்பாக, காவல் துறை, வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் கிராமத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட இடங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனா் நீதிபதிகள்.