மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்தச் சங்கத்தின் மாநில அளவிலான கருத்தரங்கம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் ஆா். புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். குன்னிகிருஷ்ணன், துணைத் தலைவா் ஜெ. குருமூா்த்தி, சிஐடியூ மாநிலச் செயலா் இரா. லெனின், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கச் செயலா் சு. கிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலா் க. சுவாமிநாதன் நிறைவுரையாற்றினாா்.
இந்தக் கூட்டத்தில் காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை தேசியச் சொத்துகளாகப் பாதுகாக்க வேண்டும்.
60 வயதை கடந்த அனைவருக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். நுகா்வோா் விலை குறியீட்டுக்கேற்ப குறைந்தபட்ச ஊதியத்தின் 50 சவீதத் தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். காப்பீட்டு ஊழியா்களுக்கும், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும் பழைய (1995) ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பொதுத் துறை காப்பீட்டு நிறுவன ஊழியா்களுக்கு 30 சதவீத குடும்ப ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.