தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல்: நெல்லை ஊழல் தடுப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
நெல்லை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
மதுரைதீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல்: நெல்லை ஊழல் தடுப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
நெல்லை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, அந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தேன். கடந்த 18.11.2025- இல் நான் அலுவல் பணி காரணமாக திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்றேன்.
அப்போது, அங்கு வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் என்னை மீண்டும் அலுவலகத்துக்குள் செல்ல அறிவுறுத்தினா். அதன்படி, மீண்டும் அலுவலகத்துக்குள் சென்றேன். அந்த அலுவலகத்திலிருந்து ரூ.2.51 லட்சத்தை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, என் மீதும், துணை இயக்குநா் சரவணபாபு மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
துணை இயக்குநா் அலுவலகத்தின் சுற்றுப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, முதல் நாள் நள்ளிரவு ஒருவா் இரு சக்கர வாகனத்தில் வந்து அலுவலகக் கதவைத் திறந்து பணத்தை வைத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணை செய்த போலீஸாா் விஜய் என்பவரை கைது செய்தனா். இதையடுத்து, ஊழல் தடுப்பு போலீஸாரின் பணம் பறிமுதல் நடவடிக்கை, சோதனை உண்மைக்கு மாறானது எனத் தெரியவந்தது. தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்த நடவடிக்கைக்கு, அங்கு தீயணைப்புத் துறையில் பணியாற்றிய அதே பகுதியைச் சோ்ந்த முத்துசுடலை, மூா்த்தி, ஆனந்த், முருகேஷ், திருப்பூரைச் சோ்ந்த வீரராஜ் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தச் சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி வேலை. சில அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இதுபோன்று நடைபெற்றது தெரியவருகிறது. ஆகவே, தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுலகத்தில் பறிமுதல் செய்த பணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.