ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு
மேட்டுப்பட்டி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
மேட்டுப்பட்டி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை உசிலம்பட்டியைச் சோ்ந்த தவமணி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் 72 வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, இதற்கான நிதி வழங்கப்பட்டது.
ஆனால், இவற்றில் 35 பணிகள் மேற்கொள்ளப்படாமல், இதற்கான நிதி முறைகேடு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்கள் இவற்றை உறுதி செய்துள்ளன.
ஆகவே, மேட்டுப்பட்டி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியை முறைகேடு செய்த ஊராட்சி மன்றத் தலைவா், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: மதுரை மாவட்ட ஆட்சியா் மனுதாரரின் மனுவை பரிசீலித்து அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.