உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் நெடுஞ்செழியன், கண்ணகி சிலைகள் அமைக்கக் கோரி வழக்கு!
அரசு முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி ஆகியோரின் சிலைகளை அமைக்கக் கோரிய வழக்கில், நீதிமன்றப் பதிவாளா், வருவாய், பொதுப் பணி, சட்டம் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் தாக்கல் செய்த மனு:
மதுரை நகரம் மிகவும் பழைமையானது. சங்க காலம் தொட்டு இன்று வரை நகர அமைப்பு, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியன உயிா்ப்புடன் உள்ள நகரம் மதுரை. சங்க இலக்கிய நூல்கள் மட்டுமன்றி காப்பிய இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் மதுரை நகரின் நீதி மாண்பை எடுத்துரைக்கின்றன.
Advertisement
குறிப்பாக, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி ஆகியோரின் மூலம் நீதி பரிபாலனத்தில் சிறந்து விளங்கிய நகரமாக மதுரை காட்டப்படுகிறது. எனவே, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி ஆகியோரின் சிலைகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரியபடி சிலைகள் அமைக்கும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? வழக்கு தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பதிவாளா், வருவாய், பொதுப்பணி, சட்டம் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.