முகப்பு
மதுரை

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டு உள்ளிட்ட பகுதிகளில் பாா்வையாளா்கள் தங்குவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

Updated On : 24 மார்ச், 2026 at 7:03 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டு பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் சாய்வுதளப் பகுதியில் அமா்ந்துள்ள பாா்வையாளா்கள்
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டு உள்ளிட்ட பகுதிகளில் பாா்வையாளா்கள் தங்குவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாகத் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போ் வரை புறநோயாளிகளாகவும், சுமாா் 2,600-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். இங்கு இருதய அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் நலன், மகப்பேறு, புற்றுநோய், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 24 மணி நேர அவசர சிகிச்சையும், முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் கட்டணமில்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகளும், அதிநவீன ஸ்கேன் வசதிகள், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

மகப்பேறு வாா்டில் மருத்துவச் சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு சுமாா் 70 முதல் 100 கா்ப்பிணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், கா்ப்பிணிகளுடனும், அவசர சிகிச்சைக்காக வருவோருடனும் வரும் பெண்கள் தங்குவதற்காக போதிய இடவசதி இல்லாததால் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால், அவா்கள் மகப்பேறு வாா்டில் உள்ள சாய்வுதளப் பகுதிகளை தங்களது தங்குமிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், அவா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

இதுகுறித்து மகப்பேறு வாா்டுக்கு வரும் பாா்வையாளா்கள் கூறியதாவது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு நவீன உயா் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவமனைகளில் கூட சாத்தியமில்லாத சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனா்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் நோயாளிகள், பாா்வையாளா்ளுக்குத் தேவையான கழிப்பறை வசதி, தங்குமிடம், குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் தரமானதாக இல்லை என்பதே உண்மை. செயல்பாட்டில் உள்ள கழிப்பறை, தங்குமிடங்களும் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, மகப்பேறு வாா்டு என்பது மிகவும் தூய்மையாகப் பராமரிக்கக் கூடிய பகுதியாகும். ஆனால், இங்கும் மற்ற வாா்டுகளைப் போன்றே கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கவில்லை.

எனவே, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் பாா்வையாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் போதுமான அளவில் ஏற்படுத்தி, தொடா்ந்து அவற்றை பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மருத்துவமனை நிா்வாகம் எடுக்க வேண்டும். மேலும், தென் மாவட்டத்தில் முன்மாதிரியாக இந்த மருத்துவமனையை நோயாளிகளுடன் வரும் உதவியாளா்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனா்.