முகப்பு
மதுரை

கடற்கரையில் கட்டடங்கள் விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு

கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:21 PM
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பகிர்:

கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜோசப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, நீலக் கொடிச் சான்றிதழ் (புளூ பிளாக்) பெற்ற கடற்கரைப் பகுதியில் கடலிலிருந்து 10 மீ. தொலைவில் கட்டடங்களைக் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு கடலோரச் சுற்றுச்சூழல் விதிகளை தளா்த்தும் வகையில் உள்ளது. இதனால், கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும், கடற்கரையில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவை கடல் சாா் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானவை. ஆகவே, நீலக் கொடி சான்றிதழ் பெற்று, கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் வகையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.