மதுரையில் இன்று கொங்கு நாட்டு உணவுத் திருவிழா தொடக்கம்
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரையில் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 15) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரை மேலவெளி வீதியில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 1, அழகா்கோயில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 2-இல் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 17) வரை நடைபெறவுள்ளது. இதில் கொங்கு மண்டலத்தின் தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்தும் வகையில், பிற்பகல் 12.30 முதல் 3.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். இதில் பங்கேற்கும் நபா் ரூ.599, சிறியவா்கள் (6 முதல் 10 வயது வரை) ரூ.299 செலுத்த வேண்டும். கொங்கு உணவுகளுக்கே உரிய மிதமான காரம், இயற்கையான நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய உணவுகள் தயாா் செய்து பரிமாறப்படவுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், பெரியவா்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய கொங்கு நாட்டு சமையல் செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சோ்க்கப்படாமல் தரமானதாக தயாா் செய்து வழங்கப்பட உள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9176995841, 6380699288 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.