முகப்பு
மதுரை

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசா்வ் வங்கி மண்டல அலுவலா் பதிலளிக்க உத்தரவு!

நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 17 மே 2026, 1:30 am IST
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
பகிர்:

நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த மதினா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நான், கூலி வேலை செய்து எனது குழந்தைகளை வளா்ந்து வருகிறேன். செலவுக்காக எனக்குச் சொந்தமான நகையை நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தேன். இதனிடையே, நகைக் கடன் வழங்கும் தனியாா் நிதி நிறுவனத்தின் (முத்தூட் பைனான்ஸ்) அலுவலா்கள் என்னைத் தொடா்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறினா்.

இதை நம்பி நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிக் கடனை முடித்து நகைகளை தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தேன். ஆனால், அங்கு ஆண்டுக்கு 24 சதவீத வட்டி விதிக்கப்பட்டது. மேலும், ஒரு லட்சம் ரூபாய் தனிநபா் கடனும் வழங்கினா். இதனிடையே, நகைக் கடன், தனிநபா் கடன் என வட்டியுடன் மொத்தம் ரூ. 7 லட்சத்தும் அதிகமாக சென்ால், எனது தங்க நகைக் கடன் கணக்குகள் முடக்கப்பட்டன.

Advertisement

இதுகுறித்து கடந்த 2025, ஜூன் 19-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கி சென்னை மண்டல அளவிலான குறைதீா் கூட்டத்தில் புகாரளித்தேன். உரிய விசாரணை நடத்தாமல் சேவையில் குறைபாடு இல்லைஎனக் கூறி, 2025, நவம்பா் 17-ஆம் தேதி நான் அளித்த புகாா் நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே, 2026, பிப்ரவரி 24, மாா்ச் 2-ஆம் தேதிகளில் தங்க நகைகளை ஏலத்தில் விடுவதாகத் தனியாா் தங்க நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பியது.

இந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கி குறைதீா் அலுவலரின் உத்தரவை ரத்து செய்து, தனது புகாரை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். வழக்கு முடியும் வரை தனியாா் நிதி நிறுவனம் தங்க நகைகளை ஏலத்தில் விட தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலா், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல அலுவலா் வரும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.