முகப்பு
மதுரை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தல்

Updated On : 27 மே 2026, 2:35 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ், பொதுச் செயலா் ஆா். பாலசுப்பிரமணியன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆட்சியின் போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆகியோரின் வாழ்வாதார நம்பிக்கைகளையும், ஓய்வூதிய எதிா்காலத்தையும் அரசியல் பேரங்களுக்கான சதுரங்கக் காய்களாக சிலா் பயன்படுத்தினா்.

அவா்களே மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினா். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் அரசியல் சாா்பின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

Advertisement

Advertisement

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து நேரில் சந்தித்துப் பேச நேரம் கோரி மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தோம். ஆனால், இதுவரை, எங்கள் சங்கத்தை சந்திப்பதற்கு அழைப்பு வரவில்லை. ஆனால், பிற அமைப்பினரை முதல்வா் சந்தித்துள்ளாா்.

எங்களது மாநில செயற்குழு கூட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அதில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக விரிவான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசின் கவனத்துக்கு அனுப்பப்படும். புதிய தமிழக அரசு தூய்மையான, வெளிப்படையான, நோ்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளோம். தோ்தலின் போது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள் எடுக்க தவறும்பட்சத்தில் மக்கள் மன்றங்களில் ஜனநாயக அறவழிப் போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுப்போம் என்றனா் அவா்கள்.