ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை காரும், லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பொருளூர் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (42). இவர் கர்நாடக மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற உறவினர் திருமணத்தில் தங்கவேல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன் பிறகு தங்கவேல், அவரது மனைவி சந்திரா (39), மாமியார் பொம்முத்தாய் (55) மற்றும் உறவினர்களான வடகாடு கோமாளிபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி மனைவி கோகிலா (25),பொருளூர் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த அருள்முருகன் மனைவி ஜோதிமணி (39) ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வியாழக்கிழமை காரில் ஊருக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தனர். ஒட்டன்சத்திரம்-பழனி தேசிய நெடுஞ்சாலை எல்லப்பட்டிப் பிரிவு அருகே, எதிரே பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து திருச்சி நோக்கிச்சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் நொறுங்கியது. அதில் பயணம் செய்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மற்றவர்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில், பொம்முத்தாய், கோகிலா, ஜோதிமணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த சந்திரா கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஒட்டுநரான திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பார்வையிட்டார்.