திண்டுக்கல் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்
குடிநீர் வழங்கக் கோரியும், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரியும் திண்டுக்கல் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக் கோரியும், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரியும் திண்டுக்கல் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட அபிராமிநகர், டான்பொஸ்கோ நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாலேயே, பொதுமக்களுக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் தனியார் குடிநீர் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலைப்பட்டி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.