நியாய விலைக் கடையில் பொருள்கள் திருட்டு
பழனி அருகே சனிக்கிழமை இரவு நியாய விலைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சீனி, அரிசி, பாமாயில் போன்ற பொருள்களை திருடிச் சென்றனர்.
பழனி அருகே சனிக்கிழமை இரவு நியாய விலைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சீனி, அரிசி, பாமாயில் போன்ற பொருள்களை திருடிச் சென்றனர்.
பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் பழனி- பழைய தாராபுரம் சாலையில் பழனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 8ஆம் எண் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் ராஜாமணி விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல கடையை அடைத்து விட்டு ராஜாமணி சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கடை திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராஜாமணி அங்கு வந்து பார்த்த போது பூட்டை உடைத்து உள்ளே இருந்த சீனி, அரிசி, பாமாயில் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
திருடப்பட்ட பொருள்களின் எடை சுமார் 600 கிலோ ஆகும். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.