தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின் பதவி பறிப்பானது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றிதான் என அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் எம்எல்ஏ தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இத்தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை 4 ரோடு பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ தங்கதுரை தலைமை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து, டிடிவி.தினகரன் பேசியதாவது:
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இச்சூழலில், எப்போது தேர்தல் வந்தாலும் அனைத்துத் தொகுதிகளிலும் அமமுக தான் வெற்றி பெறும். ஆட்சியாளர்களால் வைப்புத் தொகையை கூட பெற முடியாது. 1977 க்கு பின், 1996 தேர்தல் நீங்கலாக பிற தேர்தல்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களே நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜெயலலிதா மூலம் எம்எல்ஏ ஆன 18 பேரின் பதவியை பறித்தது முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றிதான். தேர்தல் வரும்போது இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இப்போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ் செல்வன், மாரியப்பன் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.