நரேந்திரமோடி ஆட்சி வீட்டுக்குப் போகும்போது அதோடு சேர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியும் வீட்டுக்குப் போகும் தேர்தலாக இது அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேசினார்.
பழனி ரயிலடி திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இத்தேர்தலில் நரேந்திரமோடி ஆட்சி வீட்டுக்குப் போகும்போது அதோடு சேர்ந்து எடப்பாடி ஆட்சியும் வீட்டுக்கு போகும் தேர்தலாக இது அமைந்துள்ளது. பொள்ளாச்சி சம்பவம் காவல்துறைக்கு தெரியாமல் இருக்குமா? இதற்கு அரசியல் செல்வாக்கு இல்லாமல் நடக்காது. ஏன் குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் காட்டுகிறீர்கள்? அடுத்தது தூத்துக்குடி சம்பவம். 15 பேரை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்றார்கள். அங்கு என்ன கலவரமாக நடந்தது? கடைகளுக்கு என்ன தீ வைக்கப்பட்டதா? பேருந்து கண்ணாடி உடைந்ததா? எந்த வன்முறை சம்பவமும் நடக்க வில்லை.
அன்புமணி ராமதாஸ் நரேந்திரமோடி ஆட்சியை அகற்றுவது தான் குறிக்கோள் என பேசினார். ஆனால் தற்போது அவருக்கு காவடி தூக்குகிறார். இவர்கள் பேச்சு, காலையில் ஒன்று, மாலையில் ஒன்று நேற்று ஒன்று , இன்று ஒன்று என இருக்கிறது. ராமதாஸ் எடப்பாடியை பற்றி பேசும்போது, எடப்பாடி தமிழ்நாட்டை எடை போட்டு விற்றுவிடுவார் என்றார்.
இப்போது, நான் பார்த்த முதலமைச்சர்களிலேயே எடப்பாடி போன்ற முதலமைச்சர் யாரும் இல்லை என்கிறார். தமிழ்நாட்டை எடை போட்டு விற்பவர் எப்படி நல்லவர் ஆனார் என்று தெரியவில்லை என்றார்.