ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சடையன்குளம் நீர்வரத்து கால்வாய்களை தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரும் பணியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சடையன்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெறுகின்றன.
பரப்பலாறு அணையில் இருந்து வரும் நீரானது சடையன்குளத்திற்கு நேரிடையாக செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், வரத்துக் கால்வாய்களை அகலப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் செய்ய முன்வந்தனர்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.36.70 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் தங்கச்சியம்மாபட்டி விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
ஒரு லட்சம் பனை விதைகள் நடுவதற்கும், புங்கை மரங்கள் நடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.
நீர்வரத்து கால்வாய்களை சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கவிதா, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தனசேகர், எவர்கிரீன் சிட்டி கிளப் நிர்வாகிகள்,திண்டுக்கல் மாவட்ட பால் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், நீலமலைக்கோட்டை விழுதுகள், ஒட்டன்சத்திரம் லயன்ஸ் கிளப், ஒட்டன்சத்திரம் ஒருங்கிணைந்த வர்த்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.