நத்தம் அருகே இரு வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் உள்பட 3 பேரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி பகுதியில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப்பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அதில், அந்த நபர் மதுரையைச் சேர்ந்த சந்திரபோஸ் (60) என்றும், மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்ததை அடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதேபோல், செந்துறை பகுதியில் போலீஸார் ரோந்து சென்றபோது, பிள்ளையார்நத்தம் பகுதியிலுள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பது தெரியவந்தது. உடனே, மதுபாட்டில் விற்ற ப. பெருமாள் (26) மற்றும் ந. முருகன் (25) ஆகியோரரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.