தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு முறையாக பணி மற்றும் ஊதியம் வழங்கக் கோரி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேடசந்தூர் ஒன்றிய நிர்வாகி முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எரியோடு பகுதியில் 100 நாள் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கக் கோரியும், அரசு நிர்ணயித்துள்ள முழு ஊதியத்தை வழங்கக் கோரியும் கோஷமிட்டனர்.
இதனை அடுத்து வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துப் பணியாளர்களுக்கும் சமமாக பணி வழங்கப்படும் என்றும், நிறைவேற்றப்பட்ட பணிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள கோவிலூர், புதுரோடு பகுதியைச் சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகள் 200 பேர் கலந்து கொண்டனர்.