கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இ-சேவை மையங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், புறநகர்ப் பகுதிகளான செண்பகனூர், சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமான பி.எஸ்.என்.எல். இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரிவர இயங்காததால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலும் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவிகள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், பல்கலைக் கழக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள் மற்றும் தொலைபேசி இணைப்பு பெட்டிகள், கடந்த வாரம் பெய்த இடி மின்னலுடன் கூடிய மழையால் அடிக்கடி பழுதடைகின்றன. இவை விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.