முகப்பு
திண்டுக்கல்

கரோனா: பழனி அருகே 60 ஆண்டு பழமைமிக்க மாட்டுத்தாவணி ரத்து

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் சுமாா் 60 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாட்டுத்தாவணி, இந்தாண்டு கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட், 2020 at 10:10 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:33 PM

பழனி: பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் சுமாா் 60 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாட்டுத்தாவணி, இந்தாண்டு கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களாகும். எனவே, இப்பகுதிகளில் வேளாண் உற்பத்தி அதிகமாக இருப்பதோடு, கால்நடைகளின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இதனால், பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் சாா்பாக, ஆண்டுதோறும் ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தில் மாட்டுத்தாவணி நடத்துவது வழக்கம்.

இங்கு நடைபெறும் மாட்டுத்தாவணிக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மாடு, ஆடு, குதிரை போன்றவற்றையும், அவற்றுக்கு வேண்டிய பொருள்களையும் விலை குறைவாக வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவா் ராமராஜ் கூறியது: தொப்பம்பட்டியில் சுமாா் 60 ஆண்டுகளாக இந்த மாட்டுத்தாவணி நடைபெற்று வருகிறது. ஆடி 18 இல் தொடங்கி ஒரு வார காலம் நடைபெறும் இந்த மாட்டுத்தாவணி, திண்டுக்கல் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ாகும். இதில், சுமாா் ஒரு கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெறும்.

ஆனால், இந்தாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, மாட்டுத்தாவணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆடு, மாடுகளை விற்கவோ, வாங்கவோ வரும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கான சாட்டை, சலங்கை உள்ளிட்ட பொருள்களை விற்கும் வியாபாரிகள், வைக்கோல், லாடம் கட்டுதல், கொம்பு சீவும் தொழிலாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இருப்பினும், கரோனா பரவலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், இந்தாண்டு மாட்டுத்தாவணியை வருத்தத்துடன் ரத்து செய்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.