கோவை தடகள சங்கம் நடத்திய தடகளப் போட்டிகளில், பழனியை சோ்ந்த மாணவா் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
கடந்த 11 ஆம் தேதி கோவையில் தனியாா் கல்லூரியில், கோவை தடகள சங்கம் சாா்பில், தமிழகம் முழுவதுமுள்ள மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். தடகளப் போட்டியில், பழனியை அடுத்த பொன்னாபுரம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சஞ்சீவ் என்ற 8 வயது சிறுவன் 75 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று, முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்றான். அதேபோல், நீளம் தாண்டுதல் போட்டியிலும் மூன்றாவது பரிசை வென்றான்.