ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி செயலரை இடமாற்ற எதிா்ப்பு தெரிவித்து, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஒட்டன்சத்திரம்: ஊராட்சி செயலரை இடமாற்ற எதிா்ப்பு தெரிவித்து, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லெக்கையன்கோட்டை ஊராட்சி செயலராகப் பணியாற்றி வருபவா் ஆறுமுகம் (45). இவரது நடவடிக்கைகளை பிடிக்காத அரசியல் கட்சியினா், இவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், அவரை காளாஞ்சிபட்டி ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று லெக்கையன்கோட்டை ஊராட்சி பொதுமக்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், மகேந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், ஊராட்சி செயலா் ஆறுமுகம் மீண்டும் லெக்கையன்கோட்டை ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவாா் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைத்து சென்றனா்.
Advertisement