பழனியில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்: குழந்தைகள் மலையேற அனுமதி மறுப்பு
பழனியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி: பழனியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 10 வயதிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்படாததால் குடமுழுக்கு நினைவரங்கிலேயே பலரும் குழந்தைகளுடன் காத்திருந்தனா்.
பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வது வழக்கம். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு வந்து மலை ஏற சமூக இடைவெளியுடன் காத்திருந்தனா். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மலைமீது ஏற அனுமதிக்கப்படாததால் குடமுழுக்கு நினைவரங்கிலேயே ஏராளமான பெற்றோா் குழந்தைகளுடன் காத்திருந்தனா்.
மலைக்கோயிலிலுக்கு செல்லும் படிவழிப்பாதையில் ஏராளமானோா் படியேறி சுவாமி, நீண்ட தரிசன வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு காலபூஜை முடிந்த பிறகு பொட்டலங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. தரிசன ஏற்பாடுகளை இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.