முகப்பு
திண்டுக்கல்

மும்பையில் வசிப்பவருக்கு 100 நாள் வேலை: ஊராட்சி நிா்வாகம் மீது புகாா்

வத்தலகுண்டு அடுத்துள்ள ஊராட்சியில் மும்பையில் வசிக்கும் நபருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கி மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வத்தலகுண்டு அடுத்துள்ள ஊராட்சியில் மும்பையில் வசிக்கும் நபருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கி மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ளது நடக்கோட்டை கிராமம். இந்த கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அதன் மீது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்தனா்.

வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புகாா் அளித்த பின், அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலா் செல்வம் கூறியதாவது: நடகோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளா்கள் தோ்வில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு 2 முதல் 3 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பிற குடும்பத்தினா்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு பறிபோகிறது.

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாக மும்பையில் முறுக்கு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பாா்க்கும் நடகோட்டையை சோ்ந்த முருகன் என்பவா் பெயரில் வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் அரசு ஊழியா்கள் பலரும் சோ்க்கப்பட்டு உள்ளனா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா். முறைகேடுகள் நடைபெறுவதற்கான ஆதாரங்களையும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அக்கட்சியினா் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.