வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் முழுவதும் அழிக்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் முழுவதும் அழிக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...
ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் முழுவதும் அழிக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பாரஸ் எரிவாயு வயலின் மீது கடந்த புதன்கிழமை (மார்ச் 18) இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த ஈரானின் படைகள், கத்தாரில் அமைந்துள்ள முக்கிய எரிவாயு வயலின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடைபெறும் போரை மேலும் விரிவுபடுத்தும் எண்ணம் இல்லை எனவும், நட்பு மற்றும் அண்டை நாடுகளின் பொருளாதாரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விருப்பமும் தங்களுக்கு இல்லை எனவும் வியாழக்கிழமை ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”ஈரானின் எரிசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தி எதிரிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டனர். அதற்கான பதிலடி கொடுக்கப்படும்.
இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் எரிசக்தி கட்டமைப்புகள் முழுவதுமாக அழிக்கப்படும் வரையில் எங்கள் தாக்குதல் நிறுத்தப்படாது. மேலும், நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் பாதிப்புகளை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.