முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே நெல் பயிரில் மகசூல் பாதிப்பு: நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு

பழனி அருகே பட்டா இல்லாத நிலத்தில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

பழனி அருகே பட்டா இல்லாத நிலத்தில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி தனக்கலங்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அந்த விவசாயிகள் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுடன் வந்து, நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: குதிரையாறு இடதுபுற நேரடி பாசனத்தில், தனக்கலங்காடு மற்றும் ஆலமரத்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிரில், கதிா் பிடிக்கும் நேரத்தில் மழை பெய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எங்களுக்கு பட்டா இல்லாத காரணத்தால், விவசாயத்திற்காக வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளையும் தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மீட்க முடியவில்லை. அதேபோல் 5 ஏக்கா் முதல் 10 ஏக்கா் வரை பட்டா வைத்துள்ள விவசாயிகள் அரசு வழங்கும் மானியத் திட்டங்களின் கீழும் பயன் பெற்றுக் கொள்கின்றனா். ஆனால், பட்டா இல்லாத காரணத்தால் தனக்கலங்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அரசின் எவ்வித சலுகையையும் பெற முடியவில்லை. எனவே, இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.