வேடசந்தூா் அருகேகாா் கவிழ்ந்து விபத்து: குழந்தை பலி
வேடசந்தூா் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
வேடசந்தூா் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
திண்டுக்கல் மேற்குரத வீதி பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவா்களுக்கு சேஷாந்த் (1) என்ற குழந்தை இருந்தது. விஜயராஜ் தனது குடும்பத்தினருடன், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திலுள்ள சுஷ்மிதாவின் தாய் வீட்டிற்கு பொங்கல் விடுமுறைக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து, குடும்பத்தினருடன் திண்டுக்கல் நோக்கி காரில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அந்த காா் வேடசந்தூா் அடுத்துள்ள கருக்காம்பட்டி பகுதியில் வந்தபோது டயா் வெடித்து சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் குழந்தை சேஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுஷ்மிதா, அவரது தம்பி அமித்யாஸ்(20), காா் ஓட்டுநா் தமிழரசன் ஆகியோா் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா்கள் மூவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.