முகப்பு
திண்டுக்கல்

பழனியில் வாகனம் மூலம் கரோனா விழிப்புணா்வு

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனம் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனம் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. வரும் 28-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு லட்சம் முகக்கவசங்களை பக்தா்களுக்கு இலவசமாக வழங்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம் முன்பாக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அகன்ற திரையுடன் (எல்இடி) அமைக்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கோயின் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு இலவச முகக் கவசங்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், கோயில் கண்காணிப்பாளா் சண்முகவடிவு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.