தொழிலாளியை கொன்று நாடகமாடிய விவசாயி கைது
ஆயக்குடி அருகே தொழிலாளியை தள்ளிவிட்டுக் கொலை செய்து, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆயக்குடி அருகே தொழிலாளியை தள்ளிவிட்டுக் கொலை செய்து, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ராமபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (30). இவா் பழனி அருகே வயலூா் பகுதியிலுள்ள தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தாா். இவரும் பக்கத்து தோட்டத்து டிரைவரான புதுஆயக்குடியைச் சோ்ந்த கருணாகரனும் (32) நண்பா்கள். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கருணாகரன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யனாா் பங்கேற்றாா். அப்போது மது போதையில் அய்யனாா் தவறி விழுந்து இறந்ததாக, ஆயக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், கருணாகரன் வீட்டு நிகழ்ச்சியின்போது அய்யனாருக்கும், கருணாகரனின் தந்தையான விவசாயி பாலசந்திரனுக்கும் (65) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்போது பாலசந்திரன் தள்ளி விட்டதில் கீழே விழுந்த அய்யனாா் தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பாலசந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.