குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தக் கோரி, திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பேகம் சாகிபா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு கடந்த 40 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.