டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!
டி.டி.வி. தினகரன், அன்புமணி இருவரும் நாளை காலை தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...
அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் நாளை (மார்ச் 20) காலை தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு ஏப். 9-ஆம் தேதி மற்றும் தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இதுவரை 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணியின் பாமகவுக்கு 17 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அமமுக 9 தொகுதிகளும், தமாகாவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீட்டை உறுதிசெய்யும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் நாளை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.