மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல்! 14 பிரசாரப் பேரணிகளில் பிரதமர் மோடி பங்கேற்பு!
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 14 பிரசார நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்பதாகத் தகவல்...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சுமார் 14 பிரசாரப் பேரணிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
294 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 (152 தொகுதிகள்) மற்றும் ஏப்ரல் 29 (142 தொகுதிகள்) ஆகிய நாள்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினர் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிரசாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணிகள் உள்பட 14 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் பிரசாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், மூத்த நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி தலைமையில் மட்டும் சுமார் 10 பிரசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.