முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆ.சந்திரபோஸ்(40). நிலக்கோட்டை பகுதியில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி(35). இவர்களுக்கு சந்தோஷ்(15) மற்றும் சௌந்தர்யா(13) என 2 குழந்தைகள் இருந்தனர். 

நிலக்கோட்டை பகுதியில் சந்திரபோஸ் காய்கனி வியாபரம் செய்து வருகிறார். முருகேஸ்வரி சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். சிலுக்குவார்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் சந்தோஷ், 10 ஆம் வகுப்பும், கரியாம்பட்டியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் செளந்தர்யா 7ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் காய்கனி வியாபாரத்திற்கு சந்திரபோஸ் சென்றுவிட்டாராம். வியாபாரத்திற்கு சென்ற அவசரத்தில், தராசை எடுத்துச்  செல்ல மறந்த சந்திரபோஸ், மகன் சந்தோஷை தொடர்பு கொண்டு எடுத்து வரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி தராசை கொடுத்துவிட்டு சந்தோஷ் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின், சந்திரபோஸின் தந்தை ஆணைக்குட்டி என்பவர் கரியாம்பட்டியிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்ததாம். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது, அங்குள்ள மின் விசிறி கொக்கியில் முருகேஸ்வரி, சந்தோஷ், செளந்தர்யா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →