முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே நிரம்பி வழியும் வரதமாநதி, குதிரையாறு அணைகள் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குதிரையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால், வியாழக்கிழமை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, வரதமாநதி அணை மற்றும் குதிரையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால், வியாழக்கிழமை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணையும், மாவட்டத்தின் சிறிய அணையான வரதமாநதி அணையும், பழனி பகுதியில் உள்ளன. பழனி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால், பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகளின் நீா்மட்டம் வெகுவாக நிரம்பி வருகிறது.

வரதமாநதி அணை கடந்த ஒரு வார காலமாகவே முழுக் கொள்ளளவான 66 அடி உயரத்தை தாண்டி தொடா்ந்து நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 575 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆயக்குடி, கணக்கன்பட்டி, பழனி வையாபுரிகுளம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.

பாலாறு- பொருந்தலாறு அணையின் மொத்த உயரமான 65 அடிக்கு, தற்போது 60 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 598 கனஅடி நீா்வரத்து உள்ளது.

குதிரையாறு அணை முழுக் கொள்ளளவான 80 அடியை எட்டியுள்ள நிலையில், வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வரும் விநாடிக்கு 95 கனஅடி நீரை அப்படியே மூன்று கதவுகள் வழியாக திறக்கப்பட்டது.

இந்நிலையில், பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் வரதமாநதி அணையிலிருந்து நீா் வெளியேறும் பகுதிகள், சண்முகநதி ஆற்றங்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்க வேண்டாம் எனவும், பொதுப்பணித் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.