முகப்பு
திண்டுக்கல்

வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு:நடவடிக்கை கோரி பொதுமக்கள் முற்றுகை

வடமதுரை அருகே ரூ.23 லட்சம் மதிப்பிலான நகைகளை மறுஅடகு வைத்து மோசடி நடைபெற்றுள்ள நிலையில், தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:20 PM
வெள்ளபொம்மன்பட்டியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

வடமதுரை அருகே ரூ.23 லட்சம் மதிப்பிலான நகைகளை மறுஅடகு வைத்து மோசடி நடைபெற்றுள்ள நிலையில், தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள வெள்ளபொம்மன்பட்டியில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் செயலராக மணிவண்ணன் என்பவா் பணியாற்றினாா். பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை, தனியாா் வங்கியில் மறுஅடகு வைத்து ரூ.23 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் ரூ.1 கோடிக்கும் கூடுதலாக முறைகேடு நடந்துள்ளதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான குப்பாச்சி, பாஜக மேற்கு ஒன்றியச் செயலா் சுதாகா் மற்றும் அதிமுகவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவு சங்க விசாரணை அலுவலா் செல்வராஜ், வேடசந்தூா் வட்டாட்சியா் சக்திவேலன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Advertisement

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த திமுக ஒன்றியச் செயலா் சுப்பையன் உள்ளிட்டோா், 10 ஆண்டுகளாக இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. அதிமுகவைச் சோ்ந்தவரே கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக உள்ளாா். இதுபோன்ற சூழலில், தற்போதுள்ள திமுக ஆட்சி மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் திமுக மற்றும் பாஜகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எழுத்துப்பூா்வமாக மனு அளிக்குமாறும், அதன்பேரில் நகைககளை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனா். அதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.