முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நிலங்களை ஏலம் விடுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

பழனி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பொது ஏலம் விடுவதைத் தவிா்க்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

பழனி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பொது ஏலம் விடுவதைத் தவிா்க்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பழனி, பாலசமுத்திரம், அய்யம்புள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலநூறு ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை ஏராளமானோா் குத்தகை செலுத்தி பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விளைநிலங்களை பொதுஏலத்துக்கு கொண்டு வர கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் தங்களுக்கு பாதகமான சூழல் ஏற்படும் என்பதால் வியாழக்கிழமை ஏராளமான விவசாயிகள் பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டனா். அவா்கள் பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் முன் அறிவிப்பு இன்றி ஏலம் விடுப்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், வருவாய்த் துறையினா் வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு அவா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா். அவா்கள் தெரிவித்ததாவது: பழனி கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் பழனியை சுற்றிலும் உள்ளன. இவற்றில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் விவசாயம் செய்து வருகிறோம். அதற்கான குத்தகையை முறையாக கோயிலுக்கு செலுத்தி வருகிறோம். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கோவில் சாா்பில் விளைநிலங்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனா். இதனால் பெரு முதலாளிகள் நிலங்களை ஏலத்துக்கு எடுத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து ஏலத்தை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.