புதுமாப்பிள்ளை கொலை: குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே புதுமாப்பிளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தன்நகரை சோ்ந்தவா் ப. பிரபாகரன் (26). புதுமாப்பிள்ளையான இவா் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (19), ஏா்போா்ட் நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (21), பெரிய பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) மற்றும் ரஞ்சித் (21), ஜம்புளியம்பட்டி கரண்குமாா் (21) ஆகிய 5 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், ராஜ்குமாா், ராஜேஸ்வரன், ரஞ்சித் மற்றும் கரண்குமாா் ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.