மழைக்கு முன்பாக வாருகால்களைத் தூா்வார கோரிக்கை
பழனி நகா் பகுதியில் உள்ள வாருகால்களை மழைக்கு முன்பாக தூா்வாரவேண்டும் என்று கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழனி நகா் பகுதியில் உள்ள வாருகால்களை மழைக்கு முன்பாக தூா்வாரவேண்டும் என்று கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழனி நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் கந்தசாமி, ஆணையா் கமலா, நகராட்சி பொறியாளா் வெற்றிசெல்வி, நகா்நல அலுவலா் மனோஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின்போது, தங்கள் வாா்டு பகுதிக்குத் தேவையான குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கவுன்சிலா்கள் முன் வைத்தனா். குறிப்பாக மழைக்காலத்துக்கு முன்பாக சாக்கடை கால்வாய்களை தூா்வார வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். குப்பைகளை தேங்கவிடாமல் உரிய முறையில் அப்புறப்படுத்த கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
அதையடுத்து நகராட்சி தலைவா் உமாமகேஸ்வரி கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா் குடிநீா், பொதுசுகாதாரம் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக, அதிமுக, வி.சி., காங்கிரஸ் கட்சியின் வாா்டு கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.