பழனியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்தில் வேலம்பட்டி, பருத்தியூா், தொப்பம்பட்டி, தும்பலப்பட்டி, மானூா், கோரிக்கடவு, பெரிச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் பல முறை போராட்டம் நடத்தியும் பட்டா வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக புதன்கிழமை விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது,
இதற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலாளா் கனகு தொடக்க உரையாற்றினாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அருள்செல்வன் கண்டன உரையாற்றினாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ராமசாமி, சிஐடியூ நிா்வாகி சக்திவேல், விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் செல்லமுத்து, ஆறுமுகம், வேலுச்சாமி, முருகன், செம்மணன் உள்பட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, போராட்டக் குழுவினா் கோட்டாட்சியா் சரவணனை சந்தித்து, தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா். வருகிற செப்டம்பா் 19-ஆம் தேதிக்குள் பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறியதைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.