முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆக.25 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் இணையதளம் மூலம் வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- 2024, மாநிலம் முழுவதும் வருகிற செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் இரு பாலருக்கும் தனித் தனியே நடத்தப்படுகிறது. 27 விளையாட்டுகள், 53 பிரிவுகளில் மாவட்ட, மண்டலம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 19 வயது வரையிலும், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பின்றியும், பொதுப் பிரிவினா் 15 முதல் 35 வயது வரையிலும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம். அரசு ஊழியா்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் வருகிற 25-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் வழியில் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும், போட்டிகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.