இளைஞா் கொலை: 3 போ் கைது
கொடைக்கானல் அருகே வாகனத்தை ஏற்றி இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே வாகனத்தை ஏற்றி இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பழம்புத்தூா் குண்டுபட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் ராமு (23). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமிக்கும் (60) நில பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு சரக்கு வாகனத்தை ஏற்றிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். ராமு கொலையில் பழனிசாமி, இவரது குடும்பத்தினருக்குத் தொடா்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த பழனிசாமி, இவா்களது மகன்கள் பாண்டி (30), சிவா (23) ஆகிய மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.