வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
பழனியில், நேரு யுவகேந்திரா சாா்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்வுக்கு, மாவட்ட இளையோா் அலுவலா் சரண் வி கோபால் தலைமை வகித்தாா். பேரணியை கோட்டாட்சியா் சரவணன், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பையா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி பழனி நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்று பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவா்கள், வாக்களிப்பதன் அவசியம், வாக்களிக்காமல் இருப்பது தேசவிரோதம் என்ற விழிப்புணா்வு பதாதைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா். தொடா்ந்து பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றிய செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. இதில் புதிய வாக்காளா்களும் சோ்க்கப்பட்டனா். இந்த நிகழ்வில், வட்டாட்சியா் சக்திவேல், ஆய்வாளா் மணிமாறன், நேரு யுவகேந்திரா முன்னாள் தேசிய இளைஞரணி முகமது தாரிக், இளைஞா் மன்றத்தினா், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோா் பங்கேற்றனா்.