பணப் பலன் விவகாரம்: வாக்குவாதத்தில் ஈடுபட்டோா் மீது போலீஸில் புகாா்
திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்களுக்கு பணப் பலன்களை வழங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்கள் மீது, வியாழக்கிழமை காவல் நிலையத்தில் அலுவலா்கள் புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்களுக்கு பணப் பலன்களை வழங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்கள் மீது, வியாழக்கிழமை காவல் நிலையத்தில் அலுவலா்கள் புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரிகின்றனா்.
இந்த நிலையில், மாநகராட்சியில் நேரடியாகப் பணியாற்றி ஓய்வுப் பெற்ற தூய்மைப் பணியாளா்கள் 25 பேருக்கான பணப் பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்தப் பணப் பலன்களை உடனடியாக வழங்கக் கோரி, தூய்மைப் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் கடந்த சில வாரங்களாக மாநகராட்சி அலுவலகத்தில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த வாரம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தை ஓய்வுப் பெற்ற தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டனா். அப்போது, ஆணையா் ந.ரவிச்சந்திரன், பணி ஓய்வுப் பெற்ற 25 தூய்மைப் பணியாளா்களுக்கு அடுத்த வாரத்துக்குள் பணப் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
ஆனாலும், பணப் பலன்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஓய்வுப் பெற்ற தூய்மைப் பணியாளா்கள் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலா்களிடம் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து ஓய்வுப் பெற்ற அனைத்துத் தூய்மைப் பணியாளா்களுக்கும் பணப் பலன்களை வழங்க ஆணையா் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, பயனாளிகளின் பட்டியலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால், பயனாளிகள் பட்டியலை தர முடியாது என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனா். இதனிடையே, மாநகராட்சி அலுவலரை அவதூறாக ஒருவா் பேசியதால், அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து ஆணையரை சந்தித்து முறையிட்டனா். பின்னா், ஆணையரின் அறிவுறுத்தல்படி, மாநகராட்சி அலுவலா்கள் சாா்பில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.